ஒரு உறவினர் வீட்டு திருமணத்திற்கு மண்டபத்திற்கு சென்றேன். மண்டபத்துக்கு வெளியில் ஒரு பெரியவர் கையில் ஒரு சின்ன தூக்கு வாளியோடு தயக்கத்துடன் தம்பின்னு கூப்பிட்டாரு... என்னங்க தாத்தான்னு கேட்டேன்.
அதற்கு அவர் இந்த தூக்குல கொஞ்சம் சோறு வாங்கி தாப்பா என்றார்.
இதுக்கு ஏன் தயங்குறீங்க... வாங்க பந்தியிலயே உக்காந்து சாப்பிடலாம்
என்றேன்.
அதற்கு அவர், இல்ல தம்பி... பந்தியில் எல்லாம் என்னை உட்கார விட மாட்டாங்க என்றார்.
என் கூட வாங்க யார் என்ன சொல்றாங்கன்னு பாக்குறேன்னு சொல்லி உள்ளே கூட்டிட்டு போனேன். சிலருடைய பார்வை ஒரு மாதிரியாக இருந்தாலும் எதுவும் பேசவில்லை. ஆனால் குசுகுசுவென முதுகுக்குப் பின்னால் சிலர் முனங்கியதை நான் கண்டுகொள்ளவில்லை... ரெண்டு பேரும் வயிறார சாப்பிட்டுவிட்டு மொய் எழுதி விட்டு வெளியில் வந்து பார்க்கிறேன் இப்பவும் அதே பெரியவர் கூச்சத்தோடு நின்னுட்டு இருந்தார்.
இன்னும் என்ன வேணும் தாத்தான்னு கேட்டதும் வயிறு நெறெஞ்ச மாதிரி இந்த தூக்குவாளியும் நெறெஞ்சா சந்தோசமா வீட்டுக்கு கொண்டு போவேன்யா என்றார். இதெல்லாம் ஒரு விசயமா, வாங்க போகலாம்னு கூட்டிட்டு போய் பக்கத்துல இருக்கிற ஹோட்டலில் தூக்குப் பாத்திரம் நிறைய பார்சல் சாப்பாடு வாங்கி குடுத்தேன். மனுசன் என்ன நெனச்சாரோ பொல பொலனு கண்ணீர உதிர்ந்துட்டாரு. சம்பந்தமே இல்லாம என் கண்களும் லேசாக கலங்கிருச்சு.
வயிறு என்னமோ எல்லோருக்கும் ஒரு ஜான் தான். ஆனால் அதை நிறைப்பது சிலருக்கு கடலைப்போல் மிக நீளமானதாக இருக்கிறது.